"கம்யூனிகேஷன்(ஸ்) பாயிண்ட்"- தமிழ் வார செய்திதாள் மற்றும் "க்ரைம் பாயிண்ட்" புலனாய்வு வாரஇதழ்

இன்றைய (27-09-2009) செய்திப் புகைப்படங்கள்


புதுசேரியில் தி.மு.க எம்.எல்.ஏ., மீது தாக்குதல்-வீட்டில் கொள்ளை


புதுச்சேரி தி.மு.க., இளைஞரணி தலைவரும், மண்ணடிபேட்டை தி.மு.க., எம்.எல்.ஏ., வுமான ஜெயகுமார் வீட்டில் நேற்றிரவு கொள்ளையர்கள் புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். தடுக்க முயன்ற ஜெயகுமாரை கொள்ளையர்கள் இரும்பு கம்பியால் தலையில் தாக்கி உள்ளனர். இது இப்பகுதியில் நடைபெறும் 3-வது கொள்ளை சம்பவம் ஆகும்.


மதுரை மாவட்டத்திற்கு மேலும் வங்கிகள் தேவை : கலெக்டர் மதிவாணன்


மதுரை மாவட்டத்தில், இன்னும் 159 கிராமங்கள் வங்கி வசதிகளற்றதாக உள்ளதாக மாவட்ட கலெக்டர் மதிவாணன் தெரிவித்துள்ளார். மதுரையில் நடந்த மாவட்ட அளவிலான ஆய்வு கூட்டத்தில் பேசிய அவர், 2 ஆயிரம் பேருக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள 159 கிராமங்கள் வங்கி வசதிகளற்று உள்ளதால், அக்கிராமங்களில் புதிய கிளைகளை துவக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.


இன்றைய செய்திப் புகைப்படங்கள்























இலங்கை முகாம்களில் மனிதப் பேரவலம்: மனித உரிமை ஆர்வலர் எலின் ஷான்டர் வேதனை


"இலங்கை முகாம்களில் மனிதப் பேரவலம் நடக்கிறது' என்று அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் எலின் ஷான்டர் வேதனை தெரிவித்தார்.

அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் எலின் ஷான்டர், இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து தமிழகத்தில் பேசுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதுடன், அவரது இந்தியப் பயணத்துக்கான விசா அனுமதியும் ரத்து செய்யப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியது.

விடியோ கான்ஃபரன்ஸிங் மூலம்... இந்நிலையில் தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் "இலங்கைத் தமிழர்' குறித்த கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வியாழக்கிழமை நடைபெற்ற இக்கருத்தரங்கில் விடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் அமெரிக்காவில் இருந்து எலின் ஷான்டர் பேசியது:

1940-களில் போலந்து நாட்டில் சித்திரவதை முகாம்களில் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அப்படி படுகொலையானவர்களில் என்னுடைய குடும்பத்தாரும் அடங்குவர். ஈழத்தமிழருக்கு எதிராக இலங்கை ராணுவம் திட்டமிட்டு படுகொலை செய்து வருகிறது. இலங்கைத் தமிழர்கள், இலங்கையின் யூதர்கள் என்று அழைக்கலாம்.

அகதிகள் முகாமில் 10 ஆயிரம் பேர் காணாமல் போய்விட்டனர். இப்போது தொடங்கிவிட்ட பருவ மழையால் அங்கு நிலைமை மோசமாகி இருக்கிறது.

முகாம்களில் உள்ள 35 ஆயிரம் குழந்தைகளில், 1,800 பேர் பெற்றோரை இழந்து அனாதையாக்கப்பட்டுள்ளனர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் உதவி நிறுவனத்தை இலங்கை அரசு வெளியேற்றி விட்டது. அக் குழந்தைகளுக்கு யார் உதவி செய்ய இருக்கிறார்கள்.

கொசாவோ நகரில் மக்களை படுகொலை செய்த மிலோசெவிக், சூடான் பஷீர், லிபியா அதிபர் கடாபி ஆகியோர் போல இலங்கை அதிபர் ராஜபக்ஷவும் கொடுமையாக தமிழர்களை கொன்றுள்ளார். அவரை ஒரு போர் குற்றவாளியாக விசாரிக்க வேண்டும்.

உலகில் எந்த நாடும், ஈழத்தமிழருக்கு ஆதரவாக இல்லை. ஐக்கிய நாடுகள் சபை உதவ மறுக்கிறது. இப்போது தமிழக தமிழர்களும் உதவி செய்யாவிட்டால் யார் உதவி செய்வர்?. தமிழகத்தில் இருந்து 18 மைல் தொலைவில் தான் ஈழத்தமிழர்கள் உள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவின் நிறவெறி அரசுக்கு எதிராக உலக நாடுகள் பொருளாதாரப் புறக்கணிப்பு செய்தன. அதன் விளைவாக நிறவெறி அரசு வீழ்ந்தது. அதுபோல ராஜபக்ஷ அரசுக்கு எதிராக பொருளாதாரப் புறக்கணிப்பை தமிழர்கள் மேற்கொள்ள வேண்டும். இலங்கையின் பொருள்களை வாங்கக் கூடாது. அங்கு சுற்றுலா செல்லக் கூடாது.

இலங்கையில் முகாம்கள் என்ற பெயரில் முள்வேலியில் 3 லட்சம் தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ளது வேறு எங்கும் நடக்காத மனிதப் பேரவலமாகும். 3 லட்சம் பேருக்கு முறையான தங்கும் வசதி கிடையாது. போதிய கழிப்பறை வசதி கிடையாது. வெறும் 500 கழிப்பறைகள் தான் உள்ளன.

சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன் சிக்குன்-குன்யா, மலேரியா போன்ற கொடிய நோய்களுக்கு ஆளாகி இறந்து வருகின்றனர். சிகிச்சை அளிக்கப் போதிய டாக்டர்கள் இல்லை. இலங்கை அரசின் போர் குற்றங்களுக்கு சர்வதேச சமூகம் தண்டனை வழங்க வேண்டும் என்றார்.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோரும் இதில் பேசினர்.


என் மீது நம்பிக்கை வைத்த மக்களுக்காக வாழ்நாள் முழுவதும் உழைப்பேன்: பிரதமர்


பிரதமர் மன்மோகன் சிங் இன்று தன் 77-வது பிறந்த நாளை அமெரிக்காவில் பிட்ஸ்பர்க் நகரில் கொண்டாடினார். ஜி-20 மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள அவர் மாநாட்டு நிறைவாக இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- இந்திய நாட்டு மக்கள் தங்களுக்கு சேவையாற்றுவதற்காக எனக்கு 2-வது தடவையாக பிரதமர் பதவி வாய்ப்பை கொடுத்துள்ளனர். இதற்காக நான் அவர்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன். மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை நான் ஒரு கடனாக நினைக்கிறேன். இந்த கடனை திருப்பி கொடுக்க இயலாது. எனது வாழ்க்கையில் இனி மீதம் உள்ள நாட்களிலும், வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக உழைப்பதன் மூலமே என்னால் இந்த கடனை திருப்பி செலுத்த முடியும் என்று நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


பாளை ஜெயிலில் கைதி அடித்துக்கொலை


பாளை மத்திய ஜெயிலுக்குள் நேற்று முன்தினம் நடந்த கோஷ்டி மோதலில் கீழப்பாட்டத்தை சேர்ந்த செல்லத்துரை (வயது50) என்ற கொலைக்கைதி இரும்பு பைப்களால் தாக்கப்பட்டார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை சிறை காவலர்கள் பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் இன்று அதிகாலை இறந்தார். இது தொடர்பாக நெல்லை ஆர்.டி.ஓ. தமிழ்செல்வி நேரிடையாக விசாரணை நடத்தி வருகிறார்.


தொழில்நுட்ப சவால்கள் நிறைந்தது சந்திரயான்-2 : மயில்சாமி அண்ணாதுரை


வரும் 2013ம் ஆண்டில் இந்தியா விண்வெளிக்கு அனுப்பவுள்ள சந்திரயான்-2 விண்கலம், தொழில்நுட்ப ரீதியாக, விஞ்ஞானிகளுக்கு பெரும் சவாலாக உள்ளதாக சந்திரயான் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். மும்பையில் உள்ள சவுத் இண்டியன் எஜூகேசன் சொசைடி கல்லூரியில் நடந்த விழா ஒன்றில் பேசிய அவர் இதை தெரிவித்தார்.


அரியானா மாநிலத்தில் 2 பேர் சுட்டுக்கொலை


அரியானா மாநிலம் கூர்கானில் நள்ளிரவில் 4 பேர் கொண்ட கும்பல் ஒரு வீட்டில் புகுந்து 8 பேரை பிணையக்கைதிகளாக வைத்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில் அந்த கும்பலை சேர்ந்த 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 2 பேர் தப்பிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.


காங்., அறக்கட்டளை : டில்லியில் ஆலோசனை


தமிழக காங்கிரஸ் அறக்கட்டளை சார்பில் நடக்கும் பணிகள் குறித்து டில்லியில் மேலிட தலைவர் தலைமையில் விவாதிக்கப்பட்டது. தமிழக காங்கிரஸ் அறக்கட்டளை உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் டில்லியில் நடந்தது. கூட்டத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் பொருளாளர் மோதிலால் வோரா தலைமை வகித்தார். தமிழக தலைவர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் பொதுச்செயலர் ராகுல் கலந்து கொள்வார் என, எதிர்பார்க்கப்பட்டது. அவர் பங்கேற்கவில்லை. தமிழக காங்கிரஸ் அறக்கட்டளை சார்பில் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றுவரும் கட்டட பணிகள், தியாகிகள் அரங்கம் கட்டும் பணிகள் மற்றும் காமராஜர் அரங்கம், தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அறக்கட்டளை சார்பில் நடைபெறும் பணிகள் குறித்த முடிவு அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் அகில இந்திய தலைமையிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என, அக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


Bookmark and Share

©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9043023578
No part of this website may be reproduced or used in any form without permission
DESIGNED AND HOSTED BY "COMMUNICATION(S) POINT"- Weekly newspaper
send your comments and corrections