"கம்யூனிகேஷன்(ஸ்) பாயிண்ட்" - தமிழ் வார செய்திதாள் மற்றும் "க்ரைம் பாயிண்ட்" புலனாய்வு வாரஇதழ்

"உலகச் செய்திகள்,23/08/2010,காலை,IST- 06.30 மணி,நிலவரப்படி,


ஈரான் தாக்கப்பட்டால், பதிலடி உலக அளவில் இருக்கும்

அதிபர் அகமதினிஜாத் எச்சரிக்கை


ஈரான் அதிபர் அகமதினிஜாத் கத்தார் நாட்டு பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அணுசக்தி பிரச்சினையில் ஈரான் தாக்கப்பட்டால், அதற்கான பதிலடி உலக அளவில் இருக்கும் என்று எச்சரித்து இருக்கிறார். அவர் மேலும் கூறியதாவது:-

ஈரான் தாக்கப்பட்டால், அதற்காக பதிலடி கொடுக்க எங்களுக்கு இருக்கும் வழிமுறைகளுக்கு எல்லையே இல்லை. உலக அளவில் பதிலடி கொடுப்போம். நாங்கள் அணு ஆயுதங்களை தயாரிக்க மாட்டோம் என்று தொடக்கம் முதல் கூறி வருகிறோம். எங்கள் திட்டம் எல்லாம் மின்சார உற்பத்திக்காக அணுசக்தியை பயன்படுத்துவது தான்.

இஸ்ரேலுடன் நெருக்கமாக உள்ள சில நாடுகள் ஈரான் மீது தாக்குதல் நடத்த யோசித்து வருகிறார்கள். ஆனால் அவர்களின் முதலாளியான அமெரிக்கா, அவர்களை ஈரானை தாக்க அனுமதிக்காது என்று நம்புகிறேன். அப்படி தாக்கினால் ஈரானின் பதிலடி கடுமையாக வேதனையானதாகவும் இருக்கும்.

இவ்வாறு அகமதினிஜாத் கூறினார்.



  • சீனாவில் வெள்ளம் :

    லட்சக்கணக்‌கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்


    வடகொரிய எல்லையை ஒட்டியுள்ள சீனாவின் லியோனிங் மாகாணத்தில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதுவரை உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.



  • இந்தியாவின் உதவியை பெற்றது சரியான நடவடிக்கை தான்

    பாகிஸ்தான் பிரதமர் கிலானி சொல்கிறார்


    பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 1700 பலியானார்கள். கோடிக்கணக்கானவர்கள் வீடு, வாசல்களை இழந்தனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக உலக அளவில் ஐ.நா. நிதி திரட்டி வருகிறது.

    இந்தியா 25 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கியது. இதை வாங்குவதற்கு தயக்கம் காட்டிய பாகிஸ்தான் அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தால் வாங்கிக்கொண்டது.

    இந்த உதவியை பெற்றுக்கொண்டதற்கு பாகிஸ்தானில் சில அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்த எதிர்ப்புகளை ஒதுக்கி தள்ளிய பிரதமர் கிலானி, இந்தியாவின் உதவியை எந்த அடிப்படையில் ஏற்காமல் இருக்க முடியும் என்பதை எதிர்ப்பவர்கள் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டார். அவர் இது தொடர்பாக மேலும் கூறியதாவது:-

    இந்தியாவின் உதவியை வாங்காமல் இருந்தால் அது குறுகிய நோக்காக இருந்து இருக்கும். இந்தியாவின் உதவியை வாங்கி கொண்டதன் மூலம் சர்வதேச அளவில் பாகிஸ்தானின் செல்வாக்கு உயர்ந்து உள்ளது.

    வெள்ள நிவாரண பணிகளுக்கு உதவுங்கள் என்று பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதை தொடர்ந்து உலக நாடுகள் பெரிய அளவில் நிதி உதவி அளித்து வருகின்றன. இது சர்வதேச நாடுகள் பாகிஸ்தான் மீது வைத்து இருக்கிற நம்பிக்கையை காட்டுகிறது. அதனால் தான் இந்த அளவுக்கு நிதி குவிகிறது.

    இவ்வாறு கிலானி கூறினார்.



  • பின்லாடனின் சமையல்காரருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை:

    அமெரிக்க கோர்ட் தீர்ப்பு


    ஒசாமா பின்லாடன் மற்றும் அல் - குவைதாவின் முக்கிய தலைவர்கள் ஆப்கனை விட்டு தப்பியோட உதவி செய்த, ஒசாமாவின் சமையல்காரருக்கு, அமெரிக்க கோர்ட், 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

    அல் - குவைதா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லாடனிடம் சூடான் நாட்டைச் சேர்ந்த இப்ராகிம் அகமது மகமூத் அல்கோசி (51) என்பவர், 1996ல் இருந்து சமையல்காரராக வேலை பார்த்து வந்தார்.ஆப்கனில் பல்வேறு இடங்களில் உள்ள அல் - குவைதா முகாம்களுக்கு பின்லாடன் சிரமமின்றிச் செல்ல போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தவரும் இவர் தான்.

    அமெரிக்காவின் இரட்டை கோபுர தகர்ப்புக்குப் பின், ஆப்கானிஸ்தானில் பின்லாடனைத் தேடி அமெரிக்கப் படைகள் நுழைந்தபோது, பின்லாடன் மற்றும் அல் - குவைதாவின் முக்கிய தலைவர்கள் ஆப்கனை விட்டு தப்பிச் செல்ல உதவிகள் செய்திருக்கிறார்.

    கடந்த 2001ல், ஆப்கனில் இவர் பதுங்கியிருந்த அல் - குவைதா முகாம் இடமான தோரா போராவிலிருந்து, பாகிஸ்தானுக்கு சென்ற போது அங்கு அமெரிக்கப் படைகள் இவரை கைது செய்தன.

    அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள குவான்டனமோ ஜெயில் வளாகத்தில் இவர் சிறை வைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் அங்குள்ள ராணுவ கோர்ட்டில் இவர் விசாரிக்கப்பட்டார். பின்லாடன் மற்றும் முக்கியமானவர்கள் தப்பிச் செல்ல உதவியதற்காக, இவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.விசாரணையின்போது, தன் குற்றத்தை அல்கோசி ஒப்புக் கொண்டுள்ளார். இதனால் இவரது ஜெயில் தண்டனைக் குறைக்கப்பட்டு விடுவிக்கப்படலாம் அல்லது சூடானில் கொண்டு விடப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


    இன்றைய உலகச் செய்திப் புகைப்படங்கள் (23/08/2010)

  • சுயேச்சைகளின் உதவியுடன் கூட்டணி ஆட்சி அமைப்பேன்

    ஆஸ்திரேலியா பிரதமர் ஜுலியா அறிவிப்பு


    ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடந்த பாராளுமன்றத்தில் எந்த கட்சிக்கும் இறுதி பெரும்பான்மை கிடைக்காமல் போய்விட்டது. ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தின் மொத்த இடங்களின் எண்ணிக்கை 150 ஆகும். இதில் எந்த கட்சி பாதிக்கு மேல் ஒரு இடம் அதிகமாக அதாவது 76 இடங்களை பெறுகிறதோ அதுதான் ஆட்சி அமைக்க முடியும்.

    நேற்று முன்தினம் நள்ளிரவு வரை 78 சதவீத ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில், ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியும், எதிர்க்கட்சியும் தலா 71 இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்தது. சுயேச்சைகள் 3 இடங்களிலும், கிரீன் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன. ஓட்டு எண்ணிக்கை தொடர்ந்து எண்ணப்பட்டு வருகிறது.

    இன்னும் 4 இடங்களுக்கு மட்டுமே முடிவு தெரியவேண்டிய நிலையில் எந்த கட்சிக்கும் 76 இடங்கள் கிடைக்காது என்பதால் பிரதமர் ஜுலியா கில்லார்டு சுயேச்சை எம்.பி.க்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தொடங்கி இருக்கிறார். சுயேச்சைகளின் உதவியுடன் அவர் ஆட்சி அமைப்பேன். இது உறுதி என்று அவர் அறிவித்து இருக்கிறார்.



  • மணிலாவில் வெளிநாட்டுப் பயணிகளுடன் சுற்றுலா பஸ் சிறைப்பிடிப்பு


    பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் பஸ் ஒன்றை முன்னாள் போலீஸ் அதிகாரி சிறைபிடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்டதால் மனமுடைந்த அந்த போலீஸ்காரர் பஸ் ஒன்றை சிறைபிடித்தார். அவர் பயங்கர ஆயுதங்களை வைத்திருப்பதால் அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது. இதுவரை 6 பயணிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். மற்ற வெளிநாட்டுப் பயணிகளையும் பத்திரமாக மீட்க போலீசார் கடத்தலில் ஈடுபட்ட முன்னாள் போலீஸ் காரருடன் சமரசம் பேசி வருகின்றனர்.


    முந்தைய உலகச்செய்திகள்

  • Bookmark and Share

    ©2008

    All Rights Reserved

    News and Advertisement Please Contact Yuganesan,044-64541144
    +91-7299140319
    +91-9841523276
    +91-9176186119
    +91-9043023578
    No part of this website may be reproduced or used in any form without permission
    DESIGNED AND HOSTED BY "COMMUNICATION(S) POINT"- Weekly NewsPaper
    send your comments and corrections