![]() COMMUNICATION(S) POINT as your Homepage
"அண்மை செய்திகள்,04/09/2010,காலை,IST- 03.30 மணி,நிலவரப்படி, தமிழக கம்யூனிஸ்டுகளின் வன்முறை அறைகூவலுக்கு துணை போகலாமா? ஏ.பி. பரதனுக்கு கருணாநிதி கண்டனம் தமிழக கம்யூனிஸ்டுகளின் வன்முறை அறைகூவலுக்கு துணை போகலாமா என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் ஏ.பி. பரதனுக்கு முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக இருக்கும் ஏ.பி. பரதன், ஆத்திரமூட்டக் கூடிய விஷயங்களைக்கூட அமைதியான வார்த்தைகளை கோர்த்தெடுத்து வாதாடக் கூடிய இயல்புடைவர். இடதுசாரி இயக்கங்களில் இரண்டறக் கலக்காத பிரமுகர்களையும் விரோதியாகக் கருதி விஷத்தை கக்காத பண்புடையவர். ஆனால், அவரா இப்படி பேசியிருக்கிறார் என்று அதிர்ந்திடும் அளவுக்கு திமுகவைப் பற்றி அவர் அளித்துள்ள பேட்டி அமைந்துள்ளது. அது நம்பக்கூடியதாக இல்லாவிட்டாலும், யாரோ சிலரால் தவறாக தூவப்பட்ட நச்சுக் கருத்துக்களுக்கு ஆட்பட்டு அவர் கூறியுள்ள கருத்துக்கு விளக்கம் கூறியே தீர வேண்டிய நிலையில் இருக்கிறேன். "தோல்வி பயத்தில் கம்யூனிஸ்ட்டுகளை முதல்வர் சாடியிருக்கிறார்' என்று பரதன் கூறியதை படித்ததும் எனக்கு சிரிப்புதான் வந்தது. நான் எத்தனையோ தோல்விகளை அரசியலில் சந்தித்துள்ளேன். அதற்காக நான் வாடியதும் இல்லை. யாரையும் சாடியதும் இல்லை. தேர்தலை மனதில் கொண்டு சத்துணவு பணியாளர்களின் போராட்டத்தை கம்யூனிஸ்ட்டுகள் தூண்டி விடுகிறார்கள் என்றும், சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய கடமை அரசுக்கு தவிர்க்க முடியாததாகும் என்று கூறினேன். ஆர்ப்பாட்டம், போர்ப்பாட்டு, கோட்டை முற்றுகை, மாநிலம் முழுவதும் இருந்து பஸ்களில் படையெடுப்பு என்றெல்லாம் விளம்பரம் செய்துவிட்டு பேரணியாக வந்தால் சட்டப்படி அவர்களைத் தடுத்து சட்டம், ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது என்பதை அவர்கள் அறியவில்லை. கம்யூனிஸ்ட்டுகள் வைத்த கொள்ளி, பல மாநிலங்களில் மாவோயிஸ்ட் தாக்குதலாகப் பரவுகிறது என்பதை நான் வேதனையோடு சுட்டிக்காட்டியிருப்பதைக்கூட பரதன் விமர்சனம் செய்திருக்கிறார். மாவோயிஸ்ட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்தபோது அதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் எதிர்த்தார். அரசியல் ரீதியாகதான் பிரச்னையை அணுக வேண்டும் என்றார். நேபாளத்தில் மாவோயிஸ்ட்டுகள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருப்பதை இங்குள்ள கம்யூனிஸ்ட்டுகள் பாராட்டி மகிழ்கிறார்கள். "நேபாள மாவோயிஸ்ட்டுகளின் வெற்றி, தெற்காசியாவில் மாற்றத்தை ஏற்படுத்தும்'' என்று கூறியுள்ளார். எதிலும் ஆழமாகவும், தீவிரமாகவும் சிந்தித்துப் பேசக்கூடிய பரதன், இங்குள்ள கம்யூனிஸ்ட்டுகளின் வன்முறைப் போராட்ட அறைகூவல்களுக்கு துணை போகலாமா? இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார். ![]() ![]() வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சென்னை நகரில் 2 நாள் கடுமையான வெயிலுக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு திடீரென்று வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவில் நகரில் பரவலாக மிதமான மழை பெய்தது. நேற்று பகலில் அவ்வப்போது லேசாக தூறியது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. வங்க கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதாகவும், இதனால் வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் தெரிவித்தார். இதுபற்றி அவர் கூறுகையில்; தெற்கு ஒரிசா மற்றும் வட ஆந்திரா இடையேயான மேற்கு மத்திய வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, அதன் காரணமாக வளிமண்டலத்தில் சுழற்சி ஏற்பட்டு உள்ளதாகவும் இதனால் சென்னை மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே மழை பெய்து வருவதாகவும் தெரிவித்தார். குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும் வடமேற்கு திசையில் இருந்து பலத்த காற்று வீசக்கூடும். என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர். தென் மேற்கு பருவ மழை ராயலசீமா பகுதியில் தற்போது தீவிரம் அடைந்து இருப்பதால் கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் அநேக இடங்களில் கனமழை பெய்து வருவதாகவும் தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவுப்படி, அதிக பட்சமாக திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் 5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் 4 செ.மீ. மழையும், செங்குன்றம், தாமரைபாக்கம், கரூர், தோகமலை, கரைக்குடியில தலா 3 செ.மீ. மழையும் பொன்னேரி, காட்டுமன்னார்கோவில், காரைக்கால், திருமயம் ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ. மழையும் பதிவாகி இருக்கிறது. ![]() ![]() காஷ்மீர் பகுதியில் சீன ராணுவம்? சீனாவிடம் இந்தியா கடும் ஆட்சேபம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதியில் சீன நாட்டு படைகள் குவிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி குறித்து அந்நாட்டிடம் இந்தியா கவலையையும், கடும் ஆட்சேபத்தையும் தெரிவித்துள்ளது. பெய்ஜிங்கில் வெள்ளிக்கிழமை சீன வெளியுறவு துணை அமைச்சர் ஷாங் ஜிஜுனை சந்தித்த அந்நாட்டுக்கான இந்திய தூதர் ஜெய்சங்கர் இந்திய தரப்பிலான கவலையையும், ஆட்சேபத்தையும் தெரிவித்தார். ஆனால் கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதியில் சீன துருப்புகள் இருப்பதாக வெளியான செய்தி ஆதாரமற்றது என்றும், அப்பகுதியில் வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு தங்களது நாட்டு மனிதாபிமான குழுவே உதவி வருவதாகவும் ஷாங் ஜிஜுன் கூறியதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரைச் சேர்ந்த கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதியில் சுமார் 11 ஆயிரம் வீரர்களை சீனா குவித்துள்ளது எனவும் அவர்களை சாலை அமைக்கவும் ரயில் பாதை பணிகளை மேற்கொள்ளவும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஆகஸ்ட் 28 ம் தேதி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டது. இந்த செய்தி இந்தியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏற்கெனவே எல்லைப் பகுதியில் அத்துமீறிய நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டுள்ள சீனா ஏதோ முடிவுக்கு வந்துவிட்டதாக இந்தியா நினைத்தது. இதையடுத்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட செய்தி குறித்து விவாதிக்க பிரதமர் மன்மோகன் சிங், பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் குழுவின் அவசரக் கூட்டத்தை செவ்வாய்க்கிழமை கூட்டினார். இந்தக் கூட்டத்தில் சீனாவுக்கான இந்திய தூதர் ஜெய்சங்கரும் கலந்து கொண்டார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா படையை குவித்துள்ளதா என்பது குறித்து பிரதமரிடம் அவர் தெரிவித்தார். இந்நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனாவின் படைகள் இருப்பதாக வெளியான செய்தி குறித்து இந்தியாவின் கவலையையும், ஆட்சேபத்தையும் அந்நாட்டிடம் தெரிவிக்குமாறு பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் குழு ஜெய்சங்கரிடம் கேட்டுக்கொண்டது. இதைத்தொடர்ந்து சீனா சென்ற ஜெய்சங்கர் அந்நாட்டு வெளியுறவு துணை அமைச்சர் ஷாங் ஜிஜுனை சந்தித்து இந்திய தரப்பிலான ஆட்சேபத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் கில்ஜித் பகுதியில் சீன படைகள் குவிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் சீனா-பாகிஸ்தான், சீனா-இந்தியா இடையேயான நல்லுறவை சீர்குலைக்கும் திட்டத்தில் வெளியிடப்படுபவை என அந்த நாடு ஏற்கெனவே கண்டனம் தெரிவித்துள்ளது. கில்ஜித் பகுதியில் சீனப் படைகள் குவிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் ஆதாரமில்லாதவை. கற்பனை கலந்து இத்தகைய செய்திகளை பரப்பும் விஷம சக்திகளின் நோக்கம் சீனா-பாகிஸ்தான், சீனா-இந்தியா இடையேயான உறவை சீர்குலைப்பதாகும். ஆனால் இந்த திட்டம் பலிக்காது என்றும் அந்நாடு ஏற்கெனவே உறுதியாக கூறியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் சீன ராணுவம் முகாமிட்டுள்ளதாக வெளியான தகவலை பாகிஸ்தானும் மறுத்துள்ளது. வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு சீனாவின் மனிதாபிமானக் குழுவினரே உதவி வருகின்றனர் என்றும் அந்நாடு கூறியுள்ளது. இன்றைய செய்திப் புகைப்படங்கள் (04/09/2010) ![]() ![]() ![]() ![]()
இந்திய விமானப்படையில் கவுரவ கேப்டன் அந்தஸ்தை பெற்றார், தெண்டுல்கர் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான சச்சின் தெண்டுல்கருக்கு, இந்திய விமானப்படையில் கவுரவ குரூப் கேப்டன் பதவி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான விழா டெல்லியில் உள்ள விமானப்படை ஆடிட்டோரியத்தில் நேற்று நடந்தது. இதில் இந்திய விமானப்படையின் தலைமை தளபதி பி.வி.நாயக் கலந்து கொண்டு தெண்டுல்கருக்கு கவுரவ குரூப் கேப்டன் அந்தஸ்தை அளித்தார். 37 வயதான தெண்டுல்கர் கிரிக்கெட் உலகில் முடி சூடா மன்னனாக விளங்கி வருகிறார். ஏற்கனவே பத்மவிபூசன், பத்மஸ்ரீ, ராஜீவ்காந்தி கேல் ரத்னா, விஸ்டன் கிரிக்கெட் விருது, அர்ஜுனா உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றிருக்கும் அவருக்கு தற்போது வழங்கப்பட்ட கவுரவம் அவரது மணிமகுடத்தில் மேலும் ஒரு முத்தாய்ப்பாக அமைந்துள்ளது. விமானத்துறையின் எந்த பின்னணியும் இல்லாமல், விளையாட்டு வீரர் ஒருவருக்கு விமானப்படையில் அளிக்கப்பட்ட மிகப்பெரிய கவுரவ பதவி இதுவாகும். அத்துடன் அவர் விரைவில் போர் விமானத்திலும் பறக்க இருக்கிறார். கவுரவ குரூப் கேப்டன் அந்தஸ்தை பெற்ற தெண்டுல்கர் பேசுகையில், `இந்திய விமானப்படை எனக்கு அளித்த இந்த கவுரவம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய விமானப்படையில் அங்கம் வகிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். இந்திய விமானப்படையில் சேர வேண்டும் என்ற எனது சிறு வயது கனவு தற்போது நனவாகி விட்டது. இளைஞர்கள் விமானப்படையில் சேர்ந்து நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கனவு காணுங்கள். கனவு ஒருநாள் மெய்ப்படும்.' என்றார். முன்னதாக தெண்டுல்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- பாகிஸ்தான்-இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டியின் போது சூதாட்டம் நடந்ததாக வெளியான செய்திகள் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முழுமையான விசாரணை நடத்த வேண்டும். வீரர்கள் தவறு செய்து இருந்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வீரர்கள் மீதான குற்றச்சாட்டு உண்மை என்று நிரூபிக்கப்பட்டால் அது நிச்சயம் ஆட்டத்துக்கு அவப்பெயரை உருவாக்கும். இந்தியாவில் இருந்து கொண்டு இங்கிலாந்தில் என்ன நடந்தது என்பதை சொல்வதற்கு நான் ஒன்றும் நிபுணர் அல்ல. இருப்பினும் இந்த விவகாரம் எனக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. இந்திய வீரர்கள் யாரையும் சூதாட்டக்காரர்கள் அணுகினார்களா? என்று கேட்கிறீர்கள். எனது 21 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் அப்படி எதுவும் நடக்கவில்லை. எந்தவொரு இந்திய வீரரையும் சூதாட்ட புரோக்கர் அணுகினார் என்று நான் ஒருபோதும் கேள்விப்படவில்லை. இவ்வாறு தெண்டுல்கர் கூறினார். ![]() தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுக்கும் பழக்கம் இல்லை: ஜெயலலிதா தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுக்கும் பழக்கம் இயற்கையாகவே தன்னிடம் இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: 2005-ல் அக்டோபர் முதல் டிசம்பர் வரை தமிழகத்தில் வரலாறு காணாத பெருமழை பெய்தது. வெள்ள நிவாரணமாக மத்திய அரசிடம் ரூ.13 ஆயிரத்து 685 கோடியும், சிறப்பு ஒதுக்கீடாக 2.58 லட்சம் டன் அரிசியும், 43,200 லிட்டர் மண்ணெண்ணெய்யும் கோரப்பட்டது. ஆனால், மத்திய அரசின் சார்பில் முதலில் ரூ.500 கோடி மட்டுமே நிதியுதவி வழங்கப்பட்டது. 16-12-2005 அன்று தில்லியில் பிரதமரை நேரில் சந்தித்து உடனடியாக நிதியுதவி, அரிசி, மண்ணெண்ணெய் ஆகியவற்றை வழங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினேன். பிரதமரும் உதவி செய்வதாக உறுதியளித்தார். மேலும், தமிழக அரசின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைப் பாராட்டினார். அன்றிரவே என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கூடுதலாக ரூ.500 கோடியும், 10 ஆயிரம் கிலோ லிட்டர் மண்ணெண்ணெய்யும் ஒதுக்கீடு செய்திருப்பதாகவும், சாலைகளை செப்பனிட நபார்டு வங்கி உதவி செய்யும் என்றும் தெரிவித்தார். பிரதமரின் இந்த உடனடி உதவிகளை பொறுத்துக் கொள்ள முடியாத கருணாநிதி, தன்னிடம் ஆலோசிக்காமல் ஏன் நிதியுதவி வழங்கினீர்கள் என்று மத்திய அரசைக் கேட்டதாக தகவல்கள் வந்தன. ஆனால், மாநில அரசு ரூ.1,000 கோடி மட்டுமே கேட்டதாகவும், அதை அப்படியே மத்திய அரசிடம் சொல்லி பெற்றுத் தந்தது போலவும் பொய்யான தகவல்களை முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். 1970-ம் ஆண்டுகளிலேயே மத்திய அரசிடம் வாதாடி உரிமைகளை பெற்றுத்தர தொடங்கியதாக மாநில சுயாட்சி குறித்து நீண்ட விளக்கம் அளித்திருக்கிறார் முதல்வர் கருணாநிதி. ஒருவேளை, கர்நாடக அரசு ஹேமாவதி அணையைக் கட்டிக் கொள்வதில் எவ்வித ஆட்சேபமும் இல்லை என்று 6-3-1970-ல் சட்டப் பேரவையில் பேசியது, கர்நாடகம் பல்வேறு அணைகள் கட்ட உதவியாக இருந்தது, காவிரி நதிநீர்ப் பிரச்னை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை திரும்பப் பெற்றது, காவிரி ஒப்பந்தத்தை புதுப்பிக்காதது, கச்சத் தீவை தாரை வார்த்தது, முல்லைப் பெரியாறு, பாலாறு, பொன்னையாறு, பாம்பாறு என அனைத்து நதிநீர்ப் பிரச்னைகளிலும் தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுத்தது ஆகியவற்றை வாதாடி பெற்ற உரிமைகள் என்கிறாரா? 1991-ல் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதால்தான் திமுக அரசு கலைக்கப்பட்டது. அதன் பிறகு நடந்த தேர்தலில் திமுக படுதோல்வியைச் சந்தித்தது. அதே நேரத்தில் 1980-ல் எம்.ஜி.ஆரின் ஆட்சியை கலைக்கச் செய்ததையும், அதன் பிறகு நடந்த தேர்தலில் திமுக தோல்வி அடைந்ததையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 1996-ம் ஆண்டு 13 நாளில் வாஜ்பாய் ராஜிநாமா செய்தபோது பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை. அப்படியிருக்க அவர் ராஜிநாமா செய்ததற்கு நான் எப்படி காரணமாக முடியும்? 1999-ல் காவிரி பிரச்னையில் தமிழகத்துக்கு எதிரான நிலையை பாஜக எடுத்ததால் அவர்களுக்கான ஆதரவை அதிமுக வாபஸ் பெற்றது. அதன் பிறகு மருமகன் மத்திய அமைச்சராக வேண்டும் என்பதற்காக பாஜகவோடு கைகோத்து அதிலும் சாதனை படைத்தவர்தான் கருணாநிதி. தான் கடிதம் எழுதியதால்தான் மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையில் பொதுத்தேர்வு என்கிற முடிவை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது என்று அவர் கூறியுள்ளார். 15-9-2010-ல் அவர் கடிதம் எழுதினார். பொது நுழைவுத் தேர்வுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று 19-8-2010-ல் நான் அறிக்கை விட்ட பிறகுதான் மத்திய அரசு தனது முடிவை அறிவித்தது. அதுபோல கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டதைக் கண்டித்து சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கருணாநிதி கூறியுள்ளார். 26-6-1974-ல் கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டது. ஆனால், 21-8-1974-ல் தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசும்போது, ""நடைபெற்ற ஒவ்வொரு பேச்சுவார்த்தையிலும் கச்சத் தீவை விட்டுத் தரக்கூடாது என்று தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டது'' என்று கூறியதாக கருணாநிதியே ஒப்புக் கொண்டுள்ளார். இதிலிருந்து கச்சத் தீவு தாரை வார்க்கப்படுவது அவருக்கு முன்கூட்டியே தெரியும் என்பது தெளிவாகிறது. 1991-க்குப் பிறகு பிரதமர்களாக இருந்த நரசிம்மராவ், வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகியோரிடம் கடிதம் மூலமாகவும், நேரிலும் கச்சத் தீவை மீட்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இருக்கிறேன். தமிழகத்தின் உரிமைகளான கச்சத் தீவு மற்றும் காவிரி நதிநீர் பங்கீடு ஆகியவற்றை நான் திரும்பதிரும்ப வலியுறுத்தியதால்தான், மத்திய அரசு எனக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியது என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். கருணாநிதியைப் போல தமிழகத்தின் உரிமைகளை, நிதானமாக, சமாதானத் தொனியில் அடக்கத்துடன் கேட்டு விட்டுக் கொடுக்கும் பழக்கம் இயற்கையாகவே என்னிடம் இல்லை. ஏனெனில், எனக்கு சுயநலம் இல்லை. பொதுநலம் ஒன்றே எனது குறிக்கோள். மீனவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கச்சத் தீவு ஒப்பந்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இருக்கிறேன். வாட் வரி அமலாக்கம், வணிக வரி வருவாய் இழப்பு, பொருள்கள் மற்றும் சேவை வரி சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற இருப்பது, மாநில அரசின் வரிவிதிப்பு உரிமை பறிபோக இருப்பது ஆகியவை குறித்து நான் எழுப்பிய கேள்விகளுக்கு கருணாநிதி பதில் அளிக்கவில்லை. இதிலிருந்து அவற்றையெல்லாம் பறிகொடுக்க அவர் முடிவெடுத்து விட்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது என்று ஜெயலலிதா கூறியுள்ளார். ![]() பீகாரில் நக்ஸல்கள் அட்டூழியம்: கெடு முடிந்ததும் போலீஸைக் கொன்றனர் நக்ஸலைட் இயக்கத்தினர் தங்களது சகாக்களை விடுவிக்கக் கோரி விடுத்த காலக் கெடு முடிந்ததால் பிணைக் கைதியாக பிடித்துச் சென்ற போலீஸாரில் ஒருவரை கொடூரமாகக் கொன்றனர். நக்ஸலைட்டுகளுடன் பேச்சு நடத்தத் தயாராக இருப்பதாக முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்த போதிலும் இத்தகைய கொடூர கொலையை நக்ஸலைட்டுகள் நிகழ்த்தியுள்ளது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை போலீஸ் நிலையத்திலிருந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் ருபேஷ் குமார், அபய் யாதவ், பிகார் ராணுவ போலீஸ் ஹவில்தார் இடேஷம் கான், துணை சப்-இன்ஸ்பெக்டர் லூகாஸ் டெடே ஆகியோரைக் கடத்திச் சென்றனர். பல்வேறு சிறையில் உள்ள தங்களது 8 சகாக்களை விடுவிக்க வேண்டும் என்று கூறி, வியாழக்கிழமை மாலை வரை கெடு விதித்தனர். கெடு முடிந்ததைத் தொடர்ந்து பிகார் ராணுவ போலீஸ் ஹவில்தார் லூகாஸ் டெடேயை-சுட்டுக் கொன்றனர். குண்டுகள் துளைக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் கிடந்த ஹவில்தாரின் சடலத்தை லக்கிசராய் வனப் பகுதியிலிருந்து போலீஸார் மீட்டுள்ளனர். எஞ்சியுள்ள மூவரை மீட்பதற்காக தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோரிக்கையை ஏற்காவிடில் ஹவில்தார் லூகாஸ் டெடேயைப் போன்ற நிலைதான் மற்ற மூவருக்கும் ஏற்படும் என்று நக்ஸலைட்டுகள் எச்சரித்துள்ளனர். தங்களது கோரிக்கையை நிறைவேற்றத் தவறியதால் சப்-இன்ஸ்பெக்டர் அபய் யாதவை கொன்றுவிட்டதாக மாவோயிஸ்ட் செய்தித் தொடர்பாளர் என தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டுள்ள அவினாஷ் என்பவர் தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரை அபய் யாதவ்-வின் சடலம் கிடைக்கவில்லை. முன்னதாக ஊடகங்களுக்கு தொலைபேசி மூலம் பேசிய அவினாஷ், மனித உயிரைக் கொல்வது தங்கள் நோக்கமல்ல. ஆனால் இத்தகைய முடிவு எடுப்பதைத் தவிர வேறு வழி தங்களுக்கு இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். ஜெய் பாஸ்வான், விஜய் சௌராஸியா, பிரேம் புஹுயான், பிரமோத் பர்னவால், ராம்விலாஸ் தாந்த், ரமேஷ் திர்கே, அர்ஜுன் கோடா, ராத்து கோடா ஆகிய 8 நக்ஸலைட்டுகளை விடுவிக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நக்ஸலைட் இயக்கத்தினரைத் தேடும் பணியில் மத்திய ரிசர்வ் போலீஸின் கோப்ரா பிரிவு, பிகார் ராணுவ போலீஸ், சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் மாநில போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
தர்ஹாரா, காஜ்ரா, முங்கர், ஜமூய், லக்கிசராய் மாவட்டங்களில் நக்ஸலைட்டுகள் பதுங்கியிருப்பதாக நம்பப்படும் மலைப் பகுதிகள் மற்றும் காடுகளில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. முதல்வர் அவசர ஆலோசனை: நக்ஸலைட் விவகாரம் குறித்து தனது அமைச்சரவை சகாக்களுடன் முதல்வர் நிதீஷ் குமார் தீவிர ஆலோசனை நடத்தினார். நக்ஸலைட் இயக்கத்தினருடன் பேசத் தயார் என்று ஏற்கெனவே நிதீஷ் குமார் வியாழக்கிழமை அறிவித்திருந்தார். இருந்தபோதிலும் தாங்கள் விதித்த கெடு முடிந்ததால், ஒரு போலீஸாரை நக்ஸலைட்டுகள் கொன்று விட்டனர். இன்று அனைத்துக் கட்சி கூட்டம்: நக்ஸலைட் பிரச்னை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர் நிதீஷ் குமார் கூட்டியுள்ளார். இக்கூட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது. 4,000 துணை ராணுவத்தினர் திடீரென மாநிலத்தில் அதிகரித்துள்ள நக்ஸலைட்டுகளை ஒடுக்க 4,000 துணை ராணுவத்தினரை அனுப்ப வேண்டும் என்று பிகார் அரசு மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது. ஏற்கெனவே 2,400 வீரர்கள் பிகாரில் உள்ளனர். மாநில அரசின் கோரிக்கை குறித்து விரைந்து முடிவெடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி கூறினார். மத்திய அரசு முழு ஒத்துழைப்பு : நக்ஸலைட்டுகளை ஒடுக்க மாநில அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேடுதல் வேட்டை நடத்துவதற்காக ஒரு ஹெலிகாப்டர் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ராணுவம் தேவைப்பட்டால் அதையும் வழங்க மத்திய அரசு தயாராக உள்ளது என்று உள்துறை அமைச்சகத்தில் நக்ஸலைட் இயக்கத்தைக் கண்காணிக்க அமைக்கப்பட்ட பிரிவின் இணைச் செயலர் காஷ்மீர் சிங் தெரிவித்தார். பாஸ்வான் கண்டனம் : நக்ஸலைட் பிரச்னையை சரிவர கையாள நிதீஷ்குமார் அரசு தவறிவிட்டது என்று லோக் ஜன சக்தி கட்சித் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் கண்டனம் தெரிவித்துள்ளார். 6 மாவட்டங்களில் மட்டும் இருந்த நக்ஸல் இயக்கம் 25 மாவட்டங்களுக்குப் பரவ நிதீஷ்குமார் அரசே காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார். கடத்திச் செல்லப்பட்ட அப்பாவி போலீஸார்களை நக்ஸலைட்டுகள் விடுவிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 2010, செப்டம்பர் மாதம் மூன்றாம் நாள் அண்மை செய்திகள் ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan,044-64541144 +91-7299140319 +91-9841523276 +91-9176186119 +91-9043023578 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "COMMUNICATION(S) POINT"- Weekly NewsPaper send your comments and corrections |