கோப்பை எங்களுக்கே... பான்டிங் உறுதி ![]() "இறுதிப் போட்டியில் எந்த அணியுடன் மோதினாலும் எளிதாக வெற்றி பெற்று கோப்பையை வெல்வோம்" என்று ஆஸி. கேப்டன் பான்டிங் கூறியுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி முதல் அரைஇறுதியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 6 விக்கெட்டுகளை இழந்து 106 ரன் மட்டுமே எடுத்து திணறிய நிலையில், ரைட், பிரெஸ்னன் ஜோடி 7வது விக்கெட்டுக்கு 107 ரன் சேர்த்தது. இருந்தும் அந்த அணி 47.4 ஓவரில் 257 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. பிரெஸ்னன் 80, ரைட் 48 ரன் எடுத்தனர். அடுத்து விளையாடிய ஆஸி. 41.5 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 258 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் வாட்சன் 136, பான்டிங் 111 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
வெற்றி குறித்து ஆஸி. கேப்டன் பான்டிங் கூறியதாவது: "ஆடுகளம் தொடக்கத்தில் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. இதை, எனது வீரர்கள் சிறப்பாக பயன்படுத்தி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனாலே எங்களது வெற்றி எளிதானது. வாட்சன் ஆட்டம் சிறப்பாக இருந்தது. நல்ல நேரத்தில் அவர் பார்மிற்கு திரும்பியுள்ளார்.எல்லா வீரர்களும் நல்ல பார்மில் உள்ளோம். இறுதிப் போட்டியில் யாருடன் மோதினாலும் எளிதாக வெற்றி பெற்று மீண்டும் கோப்பையை வெல்வோம்" என்றார்.
பான்டிங் 68 ரன் எடுத்த போது ஒருநாள் போட்டியில் 12 ஆயிரம் ரன்னை (323 போட்டி) கடந்தார். 12 ஆயிரம் ரன்னை கடந்த முதல் ஆஸி. வீரர் (உலக அளவில் 3வது வீரர்) என்ற பெருமை அவருக்கு கிடைத்தது.
சச்சின் 16903, 44 சதம்), ஜெயசூரியா (13377, 28 சதம்) இருவரும் முறையே முதல் 2 இடத்தில் உள்ளனர். பான்டிங் அடிக்கும் 28வது சதம் இதுவாகும். இதன் மூலம் அதிக சதம் அடித்த வீரர்களில் 2வது இடத்தில் இருக்கும் ஜெயசூரியாவை அவர் சமன் செய்தார். |