நேர்காணல் - (08-04-2009)
பாரதிய ஜனதாக்கட்சியின் மாநில செயலாளர் தமிழிசைசௌந்தரராஜன் அவர்களுடன் ஓர் நேர்காணல் சென்னை, ஏப்ரல் 08-
பாரதிய ஜனதாக்கட்சியின் மாநில செயலாளர் தமிழிசைசௌந்தரராஜன் அவர்கள், வடசென்னையில், 15 பொதுக்கூட்டங்கள் நடத்தியுள்ளார் என்ற தகவலை அடுத்து அவரை தொடர்புகொண்டோம்.மிகுந்த கட்சிப்பணிகளிக்கிடையில் நேரம் ஒதுக்கிக் கொடுத்தார்கள். தமிழகத்தின் திராவிடக்கட்சிகள் செயல் வீரர் கூட்டங்கள் நடத்திக்கொண்டும், பூத் முகவர்கள்,பூத்திற்கான இடங்களை தேர்வு செய்துகொண்டிருக்கும் நிலையில் பி.ஜே.பி.யினர் பொதுக்கூட்டங்கள் நடத்த தொடங்கிவிட்டார்கள். தமிழிசை,காங்கிரஸ் பேரியக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான குமரி அனந்தனின் மூத்த மகள். டாக்டர். கணவரும் டாக்டர். அவருடன் ஒரு நேர்காணல்: கேள்வி: டாக்டருக்கு படித்துவிட்டு, அதுவும் டி.ஜி.ஓ.படித்த பிறகு, அரசியலுக்கு வரவேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது?
பதில்: நான் பள்ளியில் படிக்கும்போதே, ஆசிரியர், படித்துவிட்டு என்ன வேலைக்கு போகப்போகிறாய் என்று கேட்டதற்கு, எம்.எல்.ஏ.வாகப் போகிறேன் என்று கூறினேன். கேள்வி:அந்த சிறு வயதிலேயே எப்படி அந்த எண்ணம் ஏற்பட்டது? பதில்: அப்பாவை(குமரி அனந்தன்)பார்க்க வரும் தொண்டர்கள், தலைவர்கள், நிகழ்வுகளின் தாக்கம்தான் காரணம். அப்பாவின் தேசபக்தி, நாட்டிற்கு
பயனுள்ளவகையில் செயல்படும் விதம் சிறு வயதிலேயே என்னுள், நான் அரசியலுக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. கேள்வி:அரசியல் சம்பந்தப்பட்ட படிப்பை தேர்ந்தெடுக்காமல் மருத்துவப்படிப்பில் சேர்ந்தது எப்படி? பதில்: என் அம்மாவிற்கு நான் அரசியலில் சேருவது பிடிக்கவில்லை. அவர்கள் விருப்பப்படி மெடிக்கலில் சேர்ந்தேன். என்னுடைய விருப்பப்படி
அரசியலில் இணைந்தேன். கேள்வி:தந்தையைப்பின்பற்றி காங்கிரஸ் கட்சியில் சேராமல், பி.ஜே.பி.யைத்தேர்ந்தெடுத்தது ஏன்? பதில்:தற்போதுள்ள காங்கிரஸ் அமைப்பில், சுதந்திரப்போராட்டத்தியாகிகளுக்கும், மூத்த உறுப்பினர்களுக்கும் உரிய கவுரவம் மரியாதை கிடைப்பதில்லை.ஆடம்பரம் அதிகமாக உள்ளது. உழைப்புக்கும் மதிப்பில்லை. இப்படிப்பட்ட சூழலில் அந்த கட்சியில் சேர்ந்த்தால் பதவிகள் கிடைக்கும். உழைப்பதற்கு வாய்ப்புகள் இல்லை.மக்களுக்கு பயனுறும்வகையில் செயல்படமுடியாது என்ற முடிவுக்கு வந்தேன். மேலும் பதவிகள் கிடைத்தாலும்
அப்பாவின் பெயரை பயன்படுத்தி பெற்றதாக சொல்லுவார்கள். சொந்த முயர்ச்சியில் கட்சிப்பணியாற்றி மக்களுக்கு நிரந்தரமாக பயன்பெறும்
திட்டங்களை செய்யத்திட்டமிட்டுத்தான் பி.ஜெ.பி.யில் என்னை இணத்துக்கொண்டேன். முதலில்,தென்சென்னை மருத்துவ அணி செயலாளரகவும்
பிறகு மாநில மருத்துவ அணி செயலாளராகவும், அகில இந்திய மருத்துவ அணி இணை செயலாளராகவும், தற்போது மாநில பொதுச்செயலாளராகவும்
படிப்படியாகத்தான் பதவிகள் அளிக்கப்பட்டுள்ளேன். கேள்வி:வேட்பாளராக போட்டியிட வடசென்னையை தேர்ந்தெடுத்து விருப்பம் தெரிவித்துள்ளீர்கள், வட சென்னை தி.மு.க வும், கம்யுனிஸ்ட் கட்சியும்
வெற்றிபெற்ற தொகுதி.பி.ஜே.பிக்கு வெற்றி பெறும் அளவுக்கு வாக்குகள் கிடைக்குமா? பதில்:நான் வளர்ந்தது படித்தது எல்லாமே ராயபுரத்தில்தான். வடசென்னை வஞ்சிக்கப்படுகிறது. தென்சென்னை நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது.
சென்னையில் கட்டப்பட்ட 10 பாலங்களில், 1 மட்டும்தான் வடசென்னையில் கட்டப்பட்டுள்ளது.திருவொற்றியூர் ரயில்வே கேட் ஒரு நாளைக்கு
சுமார் 100 தடவைக்குமேல் மூடப்படுகிறது. அந்த இடத்தில் ஒரு மேம்பாலம் அவசியம் கட்டப்படவேண்டும். வியாசர்பாடியில் ஒரு சப்-வே வெகுகாலமாக கட்டப்படாமல் உள்ளது. தங்கசாலையில் நால்வழி மேம்பாலம் கட்டப்படவேண்டும். சிறு வயதிலிருந்தே ராயபுரத்தில் வசித்ததால் இந்த பகுதியின்
தேவைகள் நன்றாக தெரியும் என்பது மட்டுமல்லாமல் வெற்றி பெற்ற பிறகு மத்திய அரசாங்கத்திடம் போராடி திட்டங்களை நிறைவேற்ற முடியும். கேள்வி:தமிழகத்தில் திராவிடக்கட்சிகளின் ஓட்டு வங்கிகளிடையே போட்டியிட்டு வெல்லுவது மிகக்கடினமானதாயிற்றே? பதில்:நான் பொதுக்கூட்டம் மூலம் மக்களுக்கு எனது திட்டங்களை விளக்கிச்சொல்லி வருகிறேன். தமிழக மக்கள் பாராளுமன்றத் தேர்தலையும், சட்டமன்ற
தேர்தலையும் பிரித்து பார்த்து ஓட்டு போடுவதில் திறமையானவர்கள் என்பது எம்.ஜி.ஆர்.காலத்திலேயே நிருபிக்கப்பட்டுள்ளது. ஆகவே அதிகமான
அளவில் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்துகிறோம். மத்தியில் பி.ஜெ.பி.யையும்,காங்கிரசையும் மையப்படுத்தித்தான் ஆட்சி அமைக்கமுடியும்.இதை
மக்களுக்கு விளக்கினாலே போதும். வெற்றி எங்களுக்குத்தான் என்பதில் உறுதியாக இருக்கிறோம். ஏற்றம் வேண்டும் என்றால் மாற்றம் தேவை
என்பதே எங்கள் கட்சியின் முழக்கமாகும். வடசென்னை வாக்காளர்கள் புரிந்துக்கொள்ளும் திறன் கொண்டவர்கள். நிச்சயம் என்னை வெற்றி பெறச்
செய்து, நல்ல திட்டங்களை நிறைவேற்ற வாய்ப்பளிப்பார்கள். சந்திப்பு:எஸ்எஸ்ஸார்:சுகுமார் |